Categories

பழங்குடியினர்கள் என்ற பெயரில் நாங்கள் வாக்குகளுக்குப் பிறகு மறக்கப்பட்டவர்கள் போல வாழ்கிறோம்.


தர்மபுரி டிச 19,

மலைவாழ் மக்களை புறக்கணிக்கும் அரசு – சாலையின் சிதைவால் திணறும் சிட்லிங் கிராமங்கள்

அரசு, நிர்வாகம் கவனிக்காததால் மீண்டும் சாலை மறியல்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் பஞ்சாயத்து மலை மக்கள், கோட்டப்பட்டி–சிட்லிங் சாலை சீரமைப்பை கோரி இன்றும் மறியல் நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதில் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.



சுமார் 24 பழங்குடி கிராமங்கள் அடங்கிய இந்த பஞ்சாயத்தில் 15,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர்.

கோட்டப்பட்டி–சிட்லிங் சாலை கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி சேதமடைந்ததால், போக்குவரத்து முற்றிலும் தடுமாறியுள்ளது.

மழைக்குப் பிறகு சாலையில் உருவான மிகப்பெரிய பள்ளங்களால் கர்ப்பிணிகள், முதியவர்கள், மாணவர்கள், நோயாளிகள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாலை சேதமடைந்ததால் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அடிப்படை தேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

மூன்று ஆண்டுகளாக கோரிக்கை – அரசின் மெத்தனப் போக்கு தொடர்கிறது

மக்கள் கூறியதாவது:

“சாலை சீரமைக்க பலமுறை மனுக்கள் கொடுத்தாலும், அரசு மற்றும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பழங்குடியினர்கள் என்ற பெயரில் நாங்கள் வாக்குகளுக்குப் பிறகு மறக்கப்பட்டவர்கள் போல வாழ்கிறோம்.

“மலைப்பகுதி மக்களின் பிரச்சனையை அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து புறக்கணிக்கிறது.

சாலை போன்ற அடிப்படை வசதியும் வழங்காதது அரசு அலட்சியத்தின் உச்சம்.

”வனத்துறை, வருவாய்த் துறை ஒருவரை ஒருவர் குற்றம் சட்டும் நிலை

வனப்பகுதி வழியாகச் செல்லும் இந்த சாலை திருவண்ணாமலை–சேலம் பிரதான சாலையுடன் இணைக்கப்படுகிறது. கனரக வாகனப் போக்குவரத்தால் சாலை மேலும் சேதமடைந்துள்ளது.
வருவாய்த் துறை, “சாலை சீரமைப்புக்கான முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது” என்று விளக்கினாலும், இதுவரை எந்த நடைமுறையும் தொடங்கவில்லை.

அரசின் செயல் இழப்பு மீது மக்கள் கடும் கண்டனம்

சாலையின் மோசமான நிலை குறித்து அரசியல் கட்சிகள், மக்கள் பிரதிநிதிகள் எவரும் குரல் கொடுக்காததையும் மக்கள் கடுமையாக விமர்சித்தனர்.

“மலைவாழ் மக்களின் சாலை பிரச்சனையை அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்; இல்லையெனில் தொடர் போராட்டங்கள் ஏற்படும்” என்று மக்கள் எச்சரித்தனர்.