Categories

கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் விடிய விடிய உட்கார்ந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம்




கோவை டிச 19,

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நேற்று  செவிலியர்களை கைது செய்ததை கண்டித்து, கோவையில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த (தொகுப்பூதிய) செவிலியர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று  கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், செவிலியர் கண்காணிப்பாளர் நிலை–3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும், எம்.ஆர்.பி. தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



மேலும், தேர்தல் காலத்தில் திமுக அரசு ஆட்சி அமைந்ததும் அனைத்து செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஆட்சி அமைந்து நீண்ட காலம் ஆகியும் செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

கடந்த 10.10.2023 அன்று நடைபெற்ற டி.எம்.எஸ். முற்றுகை போராட்டத்திற்கு பின், சட்டமன்றத்தில் துறை அமைச்சர் புதிய பணியிடங்களை உருவாக்கி தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த உறுதிகள் இதுவரை நிறைவேறவில்லை என்றும் தெரிவித்தனர்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய செவிலியர்களை கைது செய்ததற்கும் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை செவிலியர்கள் விடிய விடிய அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.